MCCRF - A global volunteer network

W69. நான் என் குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில் மிகுந்த அறுவடை செய்ய அருள்புரி. (Whispers from Eternity - Tamil & English)



69. நான் என் குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில் மிகுந்த அறுவடை செய்ய அருள்புரி.

எனக்கு வழங்கப்பட்ட உணர்வுதள நிலம் சிறியது. அதில் வாழ்வை-வளமாக்கும் பயிர்களை இடாமல் அதனை தரிசாகவே போட்டு வைத்திருந்தேன். இப்போது, வாய்ப்புகளைக் கொல்லும் கடுங்குளிர்காலம் முடக்கும் மூடுபனியுடன் நெருங்குகிறது.

என் பூமி சிறியது; என் பருவக்காலமும் சிறியது. இருப்பினும் நான் மகத்தான அறுவடையை விரும்பி எதிர்பார்க்கிறேன். ஆதலால், எனக்குள்ளே உள்ள ராஜ்யங்களை போரிட்டு வாகைசூடி, பல தேசங்களை ஆக்கிரமித்து விட்டேன். இப்போது, என் உணர்வுதள எல்லைப்பரப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.

ஆனால், என் தெய்வத்தந்தையே, எனக்குள் பல்கோடி எண்ண-குடும்பங்கள் பசியுடன், அவைகளுடைய குழந்தைகளுக்கு ஊட்டவேண்டி காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த சிறுபருவப் புவிவாழ்வில் எனக்கு உனது மௌனபோதனை எனும் அறுவடை பெருத்த அளவு தேவையாயிருப்பதை நீ நன்கு அறிய வேண்டும்.

ஏக்கமெனும் நீர்ப்பாய்ச்சல் பன்முறை என் நிலத்தில் விழுந்துள்ளது; ஆயினும் அதன் விளைமண் உழக்கப் படாமலேயே இருந்தது. இப்பொழுது, இடைவிடாமல், விஞ்ஞானமுறையில் தொடர்ந்து தேடும் எந்திர ஏர்க்கருவியை உபயோகிக்கின்றேன்.

ஏ விதை விதைக்கும் தெய்வமே, உன் புலனாகா கரங்களினால், நன்கு உழக்கப்பட்ட என் பண்பட்ட மனத்தினில் உன் உயிர்பொதிந்த விதைகளைத் தூவு!

இந்த குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில், நான் உன் பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுவதனால் விளையும் மாபெரும் விளைச்சலை அறுவடை செய்ய விருப்பம் பூணுகிறேன்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
69 May I reap the greatest Harvest in the short season of Earthly Life
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.