MCCRF - A global volunteer network

W211. உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்! (Whispers from Eternity - Tamil & English)



211. உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்!
விடியலின் இதயத்திலிருந்து நான் ஒளியினாலான பூக்களைப் பறித்து உனக்கு சமர்ப்பணமாக அர்ச்சிக்கின்றேன். விடியற்காலையின் விளக்கையும், என் விழிப்பின் விளக்கையும் கொண்டு, என் காலை அமைதிக்கோயிலில் ஒளியேற்றுகின்றேன்.

பன்னெடுங்காலமாக உன்னை மறைத்திருந்த அறியாமை நிழலினிலிருந்து விலகி வெளிப்பட்ட உன் ஆனந்தமுகத்தைத் தரிசனம் செய்தேன். பிறகு உன் ஆனந்த முகத்தை என் உள்முக கண்ணின்மணி வழியே பார்த்து, என் வாழ்க்கையின் முகம் உனது ஆனந்த அருட்முகத்தை ஒத்தே அமைந்துள்ளது என்று கண்டுகொண்டேன்.

உன் அன்பின் கண்ணாடியில், என் அன்பின் வெளித்தோற்றமானது உன் சாயலை பிரதிபலிப்பதை கண்டுகொண்டேன்.

விதியினை இனி நான் சாடமாட்டேன். அன்பான தெய்வத்தாயே, என்னாலே உருவாக்கப்பட்ட அறியாமை இருள்தான் நம் அன்பின் ஒளியை இதுவரை மறைத்திருந்தது. இனி, உன் ஆனந்த முக ஸ்படிகக் கண்ணாடியில், நான் என்னைப் பார்த்து, நான் பூரணமான ஆனந்த ஸ்வரூபன் என அறிகின்றேன். நிஸ்சலனமான என் இன்பக் கண்ணாடியில், நான் உன்னை - என்றும் புனிதமான, ஒன்றேயொன்றான, பூரண ஆனந்தமாகக் காண்கின்றேன்.

உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்! என் ஆன்மச் சிமிழிலிருந்து பொங்கி வடியும் என் இதயத்தை நான் தாரை வார்க்கின்றேன்! என் மரியாதையின் மயக்கும் பரிமள கஸ்தூரியை அனைவற்றையும் முன்னேற்றும் உன் என்றும்-இயங்கும் பாதங்களில் நான் தாரை வார்க்கின்றேன்!

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
211 I pour my love at Thy roseate Feet of Immortality.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Thanks to Reprint of First Version, Self-Realization Publishing House)


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.