MCCRF - A global volunteer network

W176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.(Whispers from Eternity - Tamil & English)



176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.
தவறான சுகங்களின் மயக்கும் தீ, அதனுடன் விளையாட உன் குழந்தைகளைக் கவர்ந்தது. அந்த நாசமேற்படுத்தும் ஜ்வாலைகளின் கறுக்கி, வடுப்படுத்தும் விளைவுகளைக் குறித்து உன் அமைதியான குரல் அவர்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் உத்வேகத்துடன் அந்த அற்ப சுகத்தின் கனல்களை முனைந்து பற்றிக் கொள்ள விழைந்தனர். விழுங்கும் தழலின்கண் பலர் அவர்களின் பேராசைக் கைகளை அழுத்திக் கோரமாக அடிபட்டுக் கொண்டனர். பின், அவர்களின் அதிருப்திக் காயங்களும், சிற்றின்ப திகட்டல்களும், உன் உதவியை நாடி, உனக்காக அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

பெரும் பொறுமையுடைய மருத்துவரே! என்றும்-தவறாமல் குணமாக்கும் உன் மன்னிப்பும் அன்பும் கலந்த மருந்துக் களிம்பை வைத்துக் கொண்டு நீ அருகிலேயே நிற்கின்றாய். உன் எச்சரிக்கும் குரலை நாங்கள் கேட்கக் கற்றுக் கொடு; அதன்மூலம், நாங்கள் தேவையற்ற வேதனையால் துடித்து, அனாதரவாய்க் கதறாமல், மாறாக உன்னை நோக்கி இனிய பாட்டுக்களாய்ப் பாடுவோம்.

நாங்கள் உன் சொல் கேளா குழந்தைகள், இவ்வுலகின் தீய கேளிக்கைகள் எங்களைச் சுண்டி இழுக்கிறது. அவற்றின் இழுவைக்கு ஆட்படாமல், தெய்வீகமான உன் பேருணர்வு ஜோதியுடன் மட்டுமே இனி நாங்கள் விளையாட எங்களுக்குக் கற்றுக் கொடு.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
176 We are Thy burned children, wailing for Thy help.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.