MCCRF - A global volunteer network

W207. தெய்வத்தாயே, உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் குடிபுக வா. (Whispers from Eternity - Tamil & English)



207. தெய்வத்தாயே, உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் குடிபுக வா.

தெய்வத்தாயே, எங்கள் நெஞ்சங்களில் நீ மட்டுமே முழுவதுமாக விளங்கி சுடரொளி வீசு; எங்களுக்குள் இருக்கும் எல்லா இருள்களையும் சுட்டு எரித்துவிடு.

தெய்வத்தாயே, எங்கள் இதய பூஜாடிகளில் நீ எப்போதும் இருந்து நறுமணம் வீசு; அது உன்னிடம் பக்தி செய்யும் எங்கள் அன்பர்களுக்கு, அவர்கள் எந்த மூலையில் இருப்பினும் அங்கு சென்று பரவட்டும்.

உன்மேல் கொண்ட எங்கள் அன்புக்கண்ணீரால், பொருட்கள் மேல் உள்ள எங்கள் எல்லா ஆசைகளையும் கழுவித் தூய்மைப்படுத்து. உன்னைச் சேர்கையில் தோன்றும் ஆனந்தக் கண்ணீரால், எங்கள் துயரங்கள் அனைத்தையும் அவை மீண்டுவராவண்ணம் துடைத்து அப்புறப்படுத்து.

தெய்வத்தாயே, எங்கள் சிறிய இதயங்களை இணைத்துப் பெரிதாக்கி உன் எங்கும்நிறைத்தன்மை இடையறாமல் என்றும் அதில் தங்குமாறு செய். உன் புனிதக் கண்ணாடியில் எங்களை நாங்கள் உள்ளபடி காணுமாறு பழக்கு. உன்மேல் கொண்ட எங்கள் அன்புச்சுடர், உலகாயத ஆசைகளெனும் சிறிதாகச் சீறும் கனல்களைத் தாண்டி வானுயரத்திற்கு மேல் எழும்பட்டும்.

என் தெய்வத்தாயே, மறதியெனும் இருண்ட வானில், முழங்கும் இடியாய் எங்கள் அன்றாடவேலைகள் இடித்தபோதிலும், உன்மேல் கொண்ட எங்கள் பக்தி வால்-நட்சத்திரமாக ஒளிர்ந்து பாயட்டும்.

இறைவியே, கோயில்கள், நிறுவனங்கள், பணம், கோடிக்கணக்கான அலைக்கழிப்புகள் என அவை உன் தெய்வீக ரூபத்தில் வந்து எங்களை குழப்பமடையச் செய்கிறது. போதும் இச்சோதனை, இதுவே தருணம்! நீ உள்ளபடி நிஜரூபத்தில் வந்து உனக்காகக் காத்திருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் உடனே குடிபுகு.

அம்மா! அறியாமையெனும் இருண்ட இரவினில் உழலும் எங்கள் செயல்களுக்கு, நீ துருவ நட்சத்திரமாய் இருந்து எங்களை பத்திரமாக உன் இருப்பிடத்திற்கு வழிநடத்திச் செல்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
207 Divine Mother, come Thyself into the waiting Temple of our Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Thanks to Reprint of First Version, Self-Realization Publishing House)



---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.